இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 21 மார்ச், 2009

'ஆன்-லைன்' தேர்வில் அசத்தும் பல்கலைக்கழகம்

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பருவ இடைத் தேர்வுகள் "ஆன்-லைன்' முறையில் நடத்தப்பட்டன. கோவை உட்பட தமிழகம் முழுவதும் 1,150 மாணவர்கள் முதன் முறையாக, ஆன்-லைன் முறையில் விடையளித்தனர். வேளாண் பல்கலையில் 2009-2010 கல்வியாண்டில் இளம் அறிவியல் பாடப் படிப்புகளான வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், மனையியல், வேளாண் தொழில் மேலாண்மை மற்றும் இளம் தொழில்நுட்பப் பாடப் படிப்புகளான வேளாண் பொறியியல், உணவு பதப்படுத்தல் பொறியியல், உயிரியல் தொழில்நுட்பம், தோட்டக்கலை, சக்தி மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், உயிர்த் தகவலியல், வேளாண் தகவல் தொழில்நுட்பம் போன்ற பாடப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்படிப்புகளுக்கான தேர்வுகள், இந்தாண்டு முதல் "ஆன்-லைன்' முறையில் நடத்தப்படுகிறது. வேளாண் பல்கலையில் நேற்று துவங்கிய தேர்வில் 300 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இந்தியாவில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள "ஆன்-லைன்' தேர்வுகளை, பல்கலை துணைவேந்தர்(பொறுப்பு)சந்தானகிருஷ்ணன் பார்வையிட்டார்.

இது பற்றி அவர் கூறியதாவது: கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில் 50 சதவீத கேள்விகள் மட்டும் ஆன்-லைனில் நடத்தப்பட்டது. அதன் வெற்றியை தொடர்ந்து, இந்தாண்டு அனைத்து கேள்விகளும் ஆன்-லைன் முறையில் நடத்தப்படுகிறது. இந்திய கல்வி நிறுவனங்களில் "ஆன்-லைன்' முறையில் தேர்வு நடத்தப்படுவது இதுவே முதன் முறை. அனைத்து மாணவர்களுக்கும் கடந்தாண்டு "லேப்-டாப்' கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. கிராமங்களைச் சேர்ந்த பல மாணவர்களால், கடந்தாண்டு கம்ப்யூட்டரில் வேகமாக "கீ இன்' பண்ண முடியவில்லை. ஓராண்டு பயிற்சிக்குப் பின், இந்தாண்டு தேர்வு எழுதும் அளவுக்கு பயிற்சி பெற்று விட்டனர்.
இதனால், ஒரு மணி நேர தேர்வை 15-30 நிமிடங்களுக்குள் மாணவர்கள் முடித்து விட்டனர். கோவையில் 300 மாணவர்களும், தமிழகம் முழுவதும் 750 மாணவர்களும் இன்று(நேற்று) தேர்வு எழுதுகின்றனர். கேள்வித்தாள்களை வெப்சைட்டில் வெளியிட்டு விடுகிறோம். தேர்வு துவங்கியவுடன் அதற்கான "பாஸ்வேர்டு' வழங்கப்படுகிறது. இதனுடன் மாணவர்கள், தங்கள் அடையாள எண்ணையும் "டைப்' செய்தால், கேள்விகளை திரையில் கண்டு விடையளிக்கத் துவங்கி விடலாம்.
தேர்வு முடிந்தவுடன் "சப்மிட்' கொடுத்தால் அனைத்து விடைகளும் சர்வர் இணைப்புக்கு வந்துவிடும். அதன் பின் விடைகளை யாராலும் பார்க்க முடியாது. விடைத்தாள் திருத்தும் நாளன்று அதற்கான "பாஸ்வேர்டு' வழங்கப்படும். விடைகளை திருத்தும் பணிகளும் இந்தாண்டு முதல் "ஆன்-லைனில்' நடத்தப்படும். மதிப்பெண்கள் மாணவர்களுக்கு வெப்சைட் மூலம் அனுப்பி வைக்கப்படும். உயர் படிப்புக்காக வெளிநாடு செல்லும் மாணவர்கள், ஜி.ஆர்.இ., "டோபல்' போன்ற தேர்வுகளை ஆன்-லைனில் எழுத, இந்த ஆன்-லைன் தேர்வு அனுபவம் கைகொடுக்கும். பல்கலையின் இறுதி பருவத் தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளும் இனி "ஆன்-லைன்' முறையில் நடத்தப்படும்.

விடுதியில் தேர்வு எழுதலாம் : உடல் நலக்குறைவால் பல்கலைக்கு வர முடியாதவர்கள், பல்கலை விடுதியில் இருந்தபடி தேர்வு எழுதலாம். தனி அறையில் கண்காணிப்பு வசதியுடன் தேர்வு நடத்தப்படும். இதற்கென மாணவர் விடுதிகளில் கம்ப்யூட்டர்கள்இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மாணவர்கள் விடுதிகளில் இருந்தபடி இணையதள வசதியை பெறலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக