இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 10 ஏப்ரல், 2009

சீன போன்களுக்கு இணைப்பு கட்










சீன போன்களுக்கு இணைப்பு கட்

மொபைல் போனுக்கான தனி அடையாள எண் இல்லாத போன்களை வைத்திருப்பவர்களுக்கு, மொபைல் சேவை நிறுவனங்கள் அவர்களுக்கான சேவை நிறுத்தப்படும் எனத் தகவல் அனுப்பத் தொடங்கிவிட்டன. ஒவ்வொரு ஜி.எஸ்.எம். வகை மொபைல் போனுக்கும் தனி அடையாள எண் உண்டு. இதனை IMEI (International Mobile Equipment Number) என அழைக்கிறார்கள். இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் மொபைல் போன்களுக்கான இந்த எண் போன் தரப்படும் அட்டைப் பெட்டியிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். அல்லது மொபைல் போனில் கண்டறியலாம். *#06# என்ற எண்களை அழுத்துவதன் மூலம் இந்த எண்ணை ஒரு மொபைல் போனில் காணலாம். இவ்வாறு எண் இருப்பதால் அந்த போன் எந்த ஏரியாவில் இருந்து இயக்கப்படுகிறது என்பதைக் கண்டறியலாம். ஒவ்வொரு முறை அழைப்பு ஏற்படுத்தும் போதும் சேவை நிறுவனத்தின் சர்வரில் இந்த 15 இலக்க எண் காட்டப்படும்.

மொபைல் சர்வீஸ் தரும் நிறுவனங்கள் இந்த எண்களைக் குறிப்பிட்டு அதற்கான சேவைகளை தரலாம், நிறுத்தலாம். பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுமின்றி ஒரு போன் திருட்டு போனால் அந்த போன் இயங்குவதை ஒரு போன் சர்வீஸ் புரவைடர் அதனை முடக்க முடியும். மற்ற ஆப்பரேட்டர்களுக்கும் இந்த எண் அறிவிக்கப்பட்டு அந்த போனை அப்படியே செயல்பட முடியாமல் நிறுத்த முடியும். சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்டு மார்க்கட் விலைக்கு 60% குறைவாக விற்பனை செய்யப்படும் போன்களுக்கு இந்த தனி அடையாள எண் இருப்பதில்லை. சில மாதங்களுக்கு முன் தீவிரவாதிகள் இத்தகைய போன்களைப் பயன்படுத்தியதால் அவர்களின் இருப்பிடம் கண்டறியும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. அந்நிகழ்ச்சியிலிருந்து மத்திய அரசு இத்தகைய போன்களின் பயன்பாட்டினைத் தடுப்பது குறித்து யோசித்து வந்தது. விற்பனையாளர்களும் பொதுமக்களும் சேவையைத் தடை செய்திடும் முடிவிற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர். பின் கால அவகாசம் கேட்டு வந்தனர்.

ஏற்கனவே மத்திய அரசின் தொலை தொடர்பு துறை மொபைல் போன் சர்வீஸ் புரவைடர்களிடம் போன்களை அடையாளம் கண்டு அவற்றைப் பதியும் ரெஜிஸ்டர்களை (EIRs (Equipment Identity Registers)) பராமரிக்க கட்டளை இட்டிருந்தது. அனைத்து நிறுவனங்களும் இதனைப் பின்பற்றி வருகின்றனர். இதன் மூலம் அழைப்பு ஏதேனும் சட்டத்திற்குப் புறம்பான போன்களிலிருந்து வந்தால் அந்த போனை அடையாளம் கண்டு நிறுத்த முடியும். அரசு ஏப்ரல் முதல் இந்த தடையினை அமல்படுத்த கேட்டுக் கொண்டிருந்தது. அதனால் ஒரு சில நிறுவனங்கள் அடையாள எண் இல்லாத போன்களை மாற்றச் சொல்லி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு செய்தி அனுப்பிக் கொண்டுள்ளனர். தேர்தலுக்குப் பின் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்படலாம் என்று தெரிகிறது. எனவே இத்தகைய போன்களை வாங்கி வைத்துப் பயன்படுத்துபவர்கள் எந்நேரமும் தங்களுக்கான சேவை நிறுத்தப்படும் வாய்ப்பை உணர்ந்து சரியான சட்ட ரீதியாக விற்பனை செய்யப்படும் போனுக்கு மாறிக் கொள்வது நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக