வழக்கம்போல இப்பதிவை முதலில் எனது ஆங்கில வலைப்பூவில் இட்டுள்ளேன்.
இப்போது நேர்காணல். அதற்கு முன்னால் ஒரு சிறு அறிமுகம்.
இன்னும் எவ்வளவு காலம்தான் மோடி குஜராத்திலேயே இருப்பார்? பிரதமராக ஆகும் ஆசை அவருக்கில்லையா? பாஜக கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால், அவர் மத்திய அரசில் பங்கு பெறுவாரா? 2002-ல் குஜராத்தை உலுக்கிய இசுலாமியர் எதிர்ப்புகளுக்கும் தீவிரவாதத்துக்கும் இடையே அவர் ஏதேனும் சம்பந்தத்தை உணர்கிறாரா?
Rediff.com சார்பாக சாய்சுரேஷ் சிவஸ்வாமியும் நிகில் லட்சுமணனும் மோடியை காந்திநகரில் அவரது அலுவலகத்தில் வைத்து நேர்காணல் செய்துள்ளனர். கீழே 70 நிமிடங்கள் நடந்த அதன் முதல் பகுதி தரப்பட்டுள்ளது.
மன்மோகன் சிங்கை விட அத்வானியே மேல் என எவ்வாறு நினைக்கிறீர்கள்?
இதற்கு பதில் மிகவும் எளிமையானது. மன்மோகன் சிங் ஒரு தலைவர் அல்ல. தான் தலைவர் அல்ல என்பதை அவரே ஒப்பு கொண்டுள்ளார். நாட்டை ஆள ஒரு தலைவரால்தான் முடியும், வெறும் ஏட்டறிவு பெற்றவர்களால் அது இயலாது. இந்திரா காந்தியின் படிப்பு என்பது சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை என்றாலும் அவர் ஒரு தலைவர். பி.வி நரசிம்மராவும் தலைவர். நாட்டின் நாடியை பிடித்து பார்க்க முடிந்தவர்கள் மட்டுமே நாட்டை ஆளவியலும்.
லால் பகதூர் சாஸ்திரியால் நாட்டின் நாடியை நன்றாகவே பிடித்து பார்ர்க முடிந்தது. ஆகவேதான் குறைந்த ஆண்டுகளே ஆண்டாலும் அவர் தனது முத்திரையை பதித்து செல்ல முடிந்தது. அடல் பிஹாரி வாஜ்பேயியும் அப்படித்தான். மொராஜி தேசாயையும் மறக்கவியலாது. சந்திரசேகர், ஏன் தேவகௌடா கூடத்தான் இதில் அடங்குவர். நல்ல வேளையாக ஐ.கே.குஜ்ராலே இவ்வாறெல்லாம் தன்னைப் பற்றி கூறிக்கொள்வதில்லை. மன்மோகன் சிங்கை எடுத்துக் கொண்டால், கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் நாடு முழுவதுமாக ஒரு முறை கூட பயணம் செய்ததில்லை. அதே நேரத்தில் அத்வானி நாடு முழுவதையும் அறிந்தவர். அப்பழுக்கற்ற அரசியல்வாதி. அரசின் பல துறைகளில் மந்திரியாக இருந்து ஆட்சியனுபவம் பெற்றிருக்கிறார். மன்மோகனுக்கும் அத்வானிக்குமிடையில் மலைக்கும் மடுவுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள் உண்டு.
அத்வானி படிப்படியாக வெவ்வேறு தளங்களில் செயல்பட்டு இப்போதைய நிலைக்கு வந்துள்ளவர்.
தற்சமயம் நாட்டில் 30 வயதுக்கும் குறைந்தவர்கள் 54 கோடி இருக்கின்றனர். அவர்களுக்கும் அத்வானிக்கும் ஒத்து போகுமா? அவர்களுக்கு நரேந்திர மோடி போன்ற தலைவர்தானே தேவை?
அப்படியே வயதை வைத்து பார்த்தால் அத்வானி மற்றும் மன்மோகன் சிங் இடையில் அப்படி ஒன்றும் வேறுபாடு இல்லையே? மன்மோகன் சிங்கை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததற்கு நான் காங்கிரசுக்கு நன்றி கூறத்தான் வேண்டும். இப்போது மக்கள் இருவரில் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். மூன்றாவதாக ஒரு தெரிவு வர இடம் இல்லை. அப்போது வயது ஒரு காரணியாக இருக்க முடியாது அல்லவா. இருவருமே வயதானவர்கள்தானே. என்ன பிரச்சினை?
நாட்டின் வருங்கால பிரதமராக உங்களை பலர் குறிப்பிடுகிறார்கள். அது பற்றி உங்கள் கருத்து என்ன?
அப்படி யாரும் என்னிடம் சொல்லவில்லையே!
தொழிலதிர்பர்கள் உங்களை ஆதரித்து பேசியது...
அவர்கள் அறிக்கையை சரியாக படியுங்கள். யாரும் பிரதம மந்திரி என்றெல்லாம் சொல்லவில்லை.
rediff message board-களில் இந்திய அரசியல் பற்றி வரும் பல மன்ற இடுகைகளில் குறைந்த பட்சமாக 50 சதவிகித வாசகர்கள் நரேந்திர மோடி நாட்டுக்கு பிரதமராவதுதான் முக்கியத் தேவை என்று கூறுகின்றனர்..
அப்படியா, ஏதேனும் குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் இது நிகழ வேண்டும் என வைத்துள்ளார்களா? (சிரிக்கிறர்) அது பற்றியும் அவர்களிடம் கேளுங்களேன்.
காலம் உங்கள் கைகளில்தான் உள்ளது என்பது வேள்ளிடைமலை.
இல்லை, காலம் மக்கள் கைகளில்தான் உள்ளது.
எது எப்படியானாலும் இது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. நான் போகும் இடங்களிலெல்லாம் அத்வானிஜிதான் அடுத்த பிரதம மந்திரி என்கிறேன். எல்லோருமே மகிழ்ச்சியாக கரவொலி எழுப்புகிறார்கள். இதுதான் எனக்கு கேட்கிறது.
தேசீய ஜனநாயக கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றால் நீங்கள் ஏற்கப் போகும் பாத்திரம் என்ன?
நான் குஜராத்தின் முதல்வர். அப்பதவியிலிருந்து யாரும் என்னை தூக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.
ஆனால் இன்னும் எவ்வளவு காலம்தான் குஜராத்திலேயே இருக்க போகிறீர்கள்? நீங்கள் ஏற்கனவே தில்லியில்தான் இருந்தீர்கள் அங்கிருந்துதானே குஜராத் சென்றீர்கள்...
இன்று மாலை எனக்கு என்ன நடக்கும் என்பது பற்றி கூட நான் கவலைப்பட்டதில்லை. நீங்கள் சொல்வதெல்லாம் எனது நிகழ்ச்சி நிரலில் இல்லை.
நாட்டின் முன்னேற்றத்தை பற்றி காட்டப்படும் போஸ்டர்களில் உங்கள் படம்தானே இருக்கிறது.
அதென்ன போஸ்டர்களில் என் படம் இருக்கிறது என்கிறீர்கள், எனக்கு புரியவில்லையே. நான் கூலிக்காரன் மாதிரி உழைக்கிறேன். நான் விளம்பர மாடல் இல்லை. தினமும் 24 மணி நேர வேலை. 15 நிமிடம் கூட விடுமுறை எடுத்து கொண்டது இல்லை.
இந்தியா பற்றி உங்கள் கனவு என்ன??
இப்போது உலகம் இருக்கும் நிலையில் இந்தியா சக்திமிக்க நாடாக உருவாகும் வாய்ப்புகள் அதிகம். இந்தியர்களாகிய நாம் எல்லோரும் ஒன்றாக உழைத்தால் இந்த 21-ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கே உரியதாகும்
முன்னேற்றம் என்பது ஒட்டுமொத்தமாக வரவேண்டிய இயக்கம் என்பது எனது நம்பிக்கை. இந்தியாவின் 100 கோடி மக்களும் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல விரும்ப வேண்டும். அதற்கான சூழலை நாம் உருவாக்க வேண்டும். ஊடகங்களும் இதில் தமது பங்கை ஆற்ற வேண்டும். அப்துல் கலாம் அவர்களும் முன்னேற்றத்தில் ஊடகங்களின் பங்கேற்பின் முக்கியத்துவம் பற்றி கூறியுள்ளார்.
மேலாண்மைக்காக உங்கள் மந்திரச்சொல் என்ன?
சொல்லப்போனால் நான் நிர்வாகி எல்லாம் இல்லை. நான் வெறுமனே ஒரு ஒருங்கிணைப்பாளன். சிறுவயதிலிருந்தே நான் ஆர்.எஸ்.எஸ்-ல் ஈடுபட்டவன். ஆகவே மனித வள்ம் என்றால் என்ன, அதன் பயன் என்ன, குழுக்களாக எப்படி செயல்படுவது என்னும் விஷயங்கள் பற்றி நான் அறிவேன். இதில்தான் நான் பயிற்சி பெற்றேன். ஆகவேதான் முதல்வராக அமர்ந்ததும் என்னால் வெற்றிக்கனியை ருசிக்க முடிந்தது..
இதற்கு முன்னால் ஒரு மாநிலத்தை நிர்வகிக்க எந்தவித அனுபவமும் இல்லாத நீங்கள் உங்கள் மாநிலத்தை நடத்தி சென்றவிதம் மற்ற எல்லா முதல்வர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக அமைந்து விட்டதே. எல்லோருமே இன்னொரு மோடியாக விரும்புகிறார்கள்.
அப்படியெல்லாம் நான் சொல்லிக்கொள்வதில்லை. நரேந்திர மோடியாகிய என்னை பொருத்தவரை அது எனது கடமை. குஜராத் மக்களுக்கு எனது சேவை அளிக்கப்பட வேண்டும் அவ்வளவே. இந்த முயற்சியில் நான் ஏதேனும் புதிதாகக் கற்க வேண்டுமென்றால் அதையும் செய்து விட்டு போகிறேன். நான் வெறும் மாணவன் மட்டுமே
நீங்கள் தினமும் அதிகாலையில் எழுந்து இணையத்தை மேய்ந்து அதில் உள்ள பத்திரிகைகளை படித்து, நாட்டில் என்னென்ன நடக்கிறது என்பதை கண்டு அதற்கேற்ப புதிது புதிதாக செயல்படுகிறீர்கள் என அறிகிறேன்...
உண்மையாகச் சொல்ல வேண்டுமென்றால் நான் அரசியல் மாணாக்கன். ஆகவே இதெல்லாம் எனக்கு இயல்பாகவே வருகிறது. தில்லியில் பல ஆண்டுகள் இருந்த போதும் அதைத்தான் செய்தேன். எல்லா குஜராத்தி பத்திரிகைகளையும் இணையத்திலேயே மேய்ந்து விடுவேன். இப்போது குஜராத்துக்கு வந்ததும் தில்லி பேப்பர்களை படிக்கிறேன். அதற்காகத்தான் இணையத்தையே பாவிக்கிறேன்.
தகவலுக்கான பல வழிகள் ஒருவரிடம் இருக்கவேண்டும். அப்போதுதான் அவரால் அறிவார்ந்த முடிவுகள் எடுத்து, மக்களை வழிநடத்தவியலும், நிலைமையை அவதானிக்கவியலும். இதில் எனக்கு உதவி செய்வது இணையமே. மக்களுடன் எனக்கு தொடர்புகளை பெற்று தருகிறது. செல்பேசி எனக்கு தகவல்கள் தந்து மக்களுடன் என்னை இணைக்கிறது. ஆகவே என்னால் நல்ல முடிவுகள் எடுக்க முடிகிறது.
அரசியல் மாணாக்கராக வரப்போகும் தேர்தலை எவ்வாறு நோக்குகிறீர்கள்?
இதில் மூன்று குழுக்கள் உள்ளன. ஒன்று பாஜக தலைமையில் உள்ள தேசீய ஜனநாயக முன்னணி, இன்னொன்று காங்கிரசின் UPA. கடைசியாக இருப்பது UPA வை விட்டு விலகியவர்கள், இதுவரை ஒருவரையும் ஏற்று கொள்ளாதவர்கள், தங்களுக்கென்று எதையோ தேடுபவர்கள், அவரவர் பிரச்சினைகளுடன் உள்ளவர்கள் என பலர் கதம்பமாக ஒன்று சேர்ந்து அமைத்த மூன்றாம் அணி.
ஒரு பக்கம் குடும்ப அரசியல் செய்யும் காங்கிரசின் கொள்கையு, மற்றொரு பக்கம் பணபலமும் உள்ளன. இவற்றுக்கு மாற்றாக உள்ளது பாஜகவின் தேசீய கொள்கை. இது தவிர்க்க முடியாதது.
தேர்தல் நெருங்க நெருங்க சக்திகள் பிரியும், சில காங்கிரஸ் முகாமுக்கு, சில பாஜக தரப்புக்கு. மிஞ்சி இருப்பவை முக்கியம் அற்றவை. அவற்றால் ஒன்றும் நடக்காது.
நாட்டுக்கு பலமான அரசு தேவை. சக்திசாலியான, அனுபவம் மிக்க தலைவர் தேவை.
இக்காரணங்கள்... கூடவே இப்போதுள்ள அரசின் சொதப்பல்கள், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பொய் வாக்குறுதிகள் ஆகியவையும் (கவனித்து முடிவு எடுக்கப்பட வேண்டியவை).
நாட்டின் எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறாமல் போனதை கூட புரிந்து கொள்ளலாம். ஆனால் நிறைவேறாத அரசின் வாக்குறுதிகளை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
முதலில் சொன்னார்கள், ஒன்றரை கோடி பேருக்கு வேலை தருவோம் என. இப்போதென்னவோ ஐந்து லட்சம் பேருக்கு வேலை பறிபோகப் போவதாக கூறுகின்றனர். என்ன ஒரு முரண்பாடு! இதுன் சாதாரண பொதுமக்களுக்கான அரசு என கூறுகின்றனர். ஆனால் விலையேற்றத்தை அவர்களால் தடுக்கவியலவில்லை. வாஜ்பேயியின் அரசு விலகியபோது வெங்காயம் கிலோ எட்டு ரூபாய்க்கு விற்றது. இப்போது அது 16 ரூஒபாய். எரிவாயு சிலிண்டரின் விலை அப்போது 270 ரூபாய்கள், இப்போது அதன் விலை 370 ரூபாய்கள். இப்போதைய அரசின் தோல்விகள் சாதாரண பொது மக்களை பாதிக்கின்றன.
பாதுகாப்பு இன்னொரு பிரச்சினை பாகிஸ்தான் முழுமையாகவே தாலிபான்வசம் செல்ல உள்ளது. கராச்சிக்கு அது வந்து விட்டது. ஆகவே நம் மக்களுக்கு பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து என்ன செய்வது? இது போல பல காரணங்கள் உள்ளன, UPA-வையோ மன்மோகன் சிங்கையோ நிராகரிக்க.
கூட்டணி கட்சிகள் மூலம் ஆட்சி என்பது இங்கு சீக்கிரம் முடிவுக்கு வருமா?
கூட்டணி ஆட்சிகள் தொடரும். ஆனால் அதிலும் தேசீய கட்சி வலுவுள்ளதாகவும் பிராந்திய கட்சிகள் அவ்வலுவுக்கு வலு சேர்ப்பதாகவும் இருத்தல் நல்லது. இதுதான் மிகச்சிறந்த படிவமாக இருக்கும்.
அம்மாதிரி படிவத்தைத்தான் அடல்ஜி தந்தார். முதலில் காபினெட்டில் கூடி விவாதித்து பிறகு முடிவெடுப்பதுதான் சிறந்த மாடல்.
ஆனால் குஜராத் மற்றும் உ.பி.யில் மட்டும் நிலையான ஒரு கட்சி ஆட்சிமுறை அமைந்தது?
அது வேறு, இது வேறு. பிரதேசம் சார்ந்த விருப்பங்கள் அங்கு ஆட்சி செய்கின்றன. தேசீய கட்சிகள் இதை உணர வேண்டும். எல்லோரையும் அரவணைத்து செல வேண்டும். அப்போதுதான் சிறு மாநிலங்களின் நலன் பாதுகாக்கப்படும்.
நமது ஜனநாயகத்தின் குறைபாடுகள் என நீங்கள் எதை கருதுகிறீர்கள், அதற்காக என்ன செய்ய வேண்டும்
சுதந்திரத்துக்கு பிறகு நாம் உரிமைகளுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளோம். கடமைகளை அலட்சியப்படுத்துகிறோம். இதை நாம் மாற்றுவதே நல்லது.
குஜராத்தையே எடுத்து கொள்வோம். நான் அரசு-மக்கள் கூட்டுமுயற்சியை ஆதரிப்பவன். மழைநீர் சேமிப்பு திட்டம் ஒரு நல்ல உதாரணம். இம்மாதிரி முயற்சிகளில் பொது மக்களையும் ஈடுபடுத்துகிறேன். கோடிக்கணக்கானவர் சேர்ந்து செய்யும் இக்காரியத்தால் மழைநீர் சேமிப்பு திட்டம் வெற்றி பெற்றுள்ளது. மக்களின் கடமை உணர்ச்சிகளை தூண்டியுள்ளேன். இதையே நாடு முழுவதற்கும் நீட்டிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
வெறுமனே ஓட்டு போடுவது மட்டுமே ஜனநாயகம் என நாம் நினைக்கிறோம். ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டு ஐந்தாண்டு கால காண்ட்ராக்டில் அதனிடம் ஆட்சியை ஒப்படைக்கிறோம். ஐந்து ஆண்டுக்கு பிறகுதான் கணக்கு கேட்கிறோம். இம்முறையில் நாம் ஜனநாயகத்திடமிருந்து மிகக் குறைந்த அளவே பலன் பெறுகிறோம். அதற்கு மாறாக நாம் செய்யும் எல்லா விஷயங்களிலும் மக்களின் பங்கு இருக்க வேண்டும்.
ஒட்டு போட்டதும் மக்களும் அரசும் வேவ்வேறு பாதைகளில் போவது ஒத்துக் கொள்ளக்கூடியதல்ல. குஜராத் இதற்கு மாறாக என்ன செய்யலாம் எனக் காட்டியுள்ளது. எல்லாவற்றிலும் மக்களுக்கும் பங்கு இருக்க வேண்டும்.
மீண்டும் டோண்டு ராகவன். மோடி உண்மையாகவே மிக வெளிப்படையாக பேசி விட்டார். மோடி அத்வானி போன்ற தலைவர்கள்தான் நாட்டுக்கு தேவை. தேசீய ஜனநாயக கூட்டணிக்கு சந்தேகத்துக்கிடமின்றி மக்கள் வெற்றிக்கனியை தருவதுதான் நாட்டுக்கு நல்லது. நாட்டின் அரசை நடத்த தினசரி சில்லறைக் கட்சிகளின் தயவில் கப்பரை ஏந்திய நிலை போக வேண்டும். ஆனால் என்ன, அவர் பிரதமராவாரா என்ற கேள்விக்கு சிக்காமல் விலாங்கு மீனாக வழுக்கி சென்று விட்டார்.
இந்த நேர்காணலின் முதல் பகுதி மட்டும்தான் இது. இரண்டாம் பகுதி இன்னும் வரவில்லை. அது வந்ததும் இப்பதிவை இடலாம் என சில நாட்கள் காத்திருந்து, பிறகு அது வரும்போது வரட்டும் என இப்போது துணிந்தேன். அது தமிழ் புத்தாண்டு தினத்தில் நிகழ்வதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.
எல்லோருக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி DONDU
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக