படித்த இளைஞர், சமூக அக்கறை கொண்டவர், அரசியலைச் சுத்தப்படுத்தத் துடிக்கும் இளம் ரத்தம் என்ற வகையில் தென்சென்னை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் நம்ம சரத்பாபுவுக்காக பிரச்சாரம் பண்ணுவோம் வாருங்கள்..!
ஒரு நல்ல குடிமகன் என்ற முறையில் தேர்தலில் வாக்கு அளிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வு இல்லாத சில இளைஞர்கள் மத்தியில்…
டாக்டராகணும், எஞ்சினியராகணும், வக்கீலாகணும்… இப்படி பல துறைகளை அடுக்கிக் கொண்டே செல்லும் இளைஞர்களில் ஒரு சிலர் கூட அரசியல் துறையில் ஈடுபட வேண்டும் என்று மனமுவந்துச் சொல்வதில்லை. மக்களுக்கு நேரடியாகச் சேவையாற்றக் கூடிய அந்தத் துறையில் பொறுப்புள்ள இளைஞர்கள் அக்கறை செலுத்தாத காரணத்தினால்தான், அந்தத் துறை இப்போது தன்னலம் மிகுந்த பலரது கைகளில் சிக்கித் தவிக்கிறது. அதை மீட்டெடுக்காமல் முடங்கிக் கிடக்கும் இளைஞர்கள் மத்தியில்…
பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமே படிப்பு என்று நினைத்திருக்கும், மனத்தில் பதியச் செய்யப்பட்டிருக்கும் இளைஞர்கள் பலரது
மத்தியில்…
இதோ ஓர் உண்மையான அக்கறையுள்ள இளைஞர் சரத்பாபு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னையில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.
நம்ம சரத்பாபு பற்றி…
சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள ஒரு ஏழைத் தாய்க்கு பொறுப்புள்ள மகனாக பிறந்தவர், சரத்பாபு. குடிசையில் வசித்துக்
கொண்டு, இட்லி கடை மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் நம்ம சரத்பாபுவை படிக்க வைத்திருக்கிறார், அந்தத் தாய்.
வறுமையை வென்ற சரத்பாபு, அகமதாபாத் ஐ.ஐ.எம்-மில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றார். இந்தப் படிப்பு முடித்த பல
இளைஞர்களும் சொகுசான வாழ்க்கையை நோக்கி விமானத்தில் பறக்க விழையும் சூழலில்… சென்னை, கோவா, பிலானி, ஹைதராபாத் என பல இடங்களில் உள்ள பல பல்கலைக்கழக கேன்டீன்களை நடத்திக் கொண்டு இருக்கிறார். ஆண்டுக்கு ஏழு கோடி ரூபாய் புழங்கும் இந்தத் தொழில் மூலமாக 250-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலை கொடுத்திருக்கிறார்.
அரசியலை ஓர் உண்மையான சேவைத் துறையாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடனும், இளைஞர்களுக்கு அரசியல் துறை மீது ஆர்வம் வருவதற்கு தூண்டும் நோக்கத்துடனும் தென்சென்னையில் மக்களவை உறுப்பினராக போட்டியிட முடிவெடுத்து களமிறங்கியிருக்கிறார், சரத்பாபு.
பதிவராக நாம் என்ன செய்யலாம்..?
தற்போதைய அரசியல் மீது நாட்டமில்லாதவர்கள் தங்கள் அதிருப்தியைப் பதிவுச் செய்வதற்கு 49ஓ-வுக்கு வாக்களியுங்கள்
என்று சில பொறுப்புள்ள பதிவர்கள் பிரசாரம் செய்து வருவதைப் பார்க்கிறேன்.
இதோ… இளைஞர் சமுதாயத்துக்கு முன்மாதிரியாக திகழத் துடிக்கும் நமது சரத்பாபுவுக்காக பதிவுகளின் மூலம் பிரசாரம் செய்யலாமே?
ஜாதி, மதம் எல்லாவற்றையும் குப்பையில் போட்டுவிட்டு இயன்றவரையில் நல்ல வேட்பாளர் நாடாள முயற்சி மேற்கொள்ளலாமே?
சரி.. நம்ம சரத்பாபுவுக்காக எப்படி பிரச்சாரம் செய்வது?
* பதிவர்கள் பலரும் குழுவாகச் சேர்ந்து சரத்பாபுவை மையப்படுத்தி ஒரு வலைப்பதிவைத் தொடங்கலாம்.
* நம்மால் இயன்றவரை நண்பர்களைத் தொடர்பு கொண்டு செல்பேசி, எஸ்.எம்.எஸ். வழி பிரசாரம் செய்யலாம்.
* சரத்பாபு பற்றி ஆளுக்கு ஒரு பதிவு எழுதலாம். அதனை தமிழிஷ், தமிழ்மணம் போன்ற திரட்டிகளின் வாயிலாக இயன்றவரைப் பரப்பலாம்.
* நாம் தான் தென்சென்னைத் தொகுதியில் இல்லையே? நாம் எப்படி வாக்களிக்க முடியும் என்று கேட்கலாம். நாம் பிரச்சாரம் மட்டும் செய்வோம், அதுவும் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து கொண்டு, ஒரு செல்போனின் உதவியுடன்.
* எப்படியும் நமது உறவினர்கள், நண்பர்கள் எவரேனும் தென் சென்னைத் தொகுதியில் வசிக்கலாம். அவர்களை தொலைப்பேசி வழியில் தொடர்பு கொண்டு வாக்கு சேகரிக்கலாம்.
* மேலும் பல யோசனைகள் இருப்பின் அதையே பதிவாக இடலாம்.
தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் தென்சென்னைத் தொகுதி மற்றும் அதன் கீழ்வரும் பகுதிகள் விவரம் வருமாறு:
தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி
1. விருகம்பாக்கம்
சென்னை (மாநகராட்சி) வார்டு எண் 65 மற்றும் 128 முதல் 131 வரை.
2. சைதாப்பேட்டை
சென்னை (மாநகராட்சி) வார்டு எண் 132 முதல் 136 வரை மற்றும் 138 முதல் 141 வரை.
3. தியாகராய நகர்
சென்னை (மாநகராட்சி) வார்டு எண் 117, 120 முதல் 127 வரை மற்றும் 137.
4. மைலாப்பூர்
சென்னை (மாநகராட்சி) வார்டு எண் 94, 96, 115 மற்றும் 142 முதல் 150 வரை.
5. வேளச்சேரி
சென்னை (மாநகராட்சி) வார்டு எண் 151 முதல் 155 வரை.
6. சோழிங்கநல்லூர்
தாம்பரம் தாலுக்கா (பகுதி) நன்மங்கலம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், காரப்பாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல்,
சிட்டலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், அரசன்கழனி, செம்மஞ்சேரி மற்றும் உத்தண்டி கிராமங்கள். புழதிவாக்கம் (உள்ளகரம்) (பேரூராட்சி), பெருங்குடி (பேரூராட்சி), கொட்டிவாக்கம் (சென்சஸ் டவுன்), ஈஞ்சம்பாக்கம் (சென்சஸ் டவுன்), பாலவாக்கம் (சென்சஸ்டவுன்), நீலாங்கரை (செசன்ஸ்டவுன்), ஒக்கியம்துரைப்பாக்கம் (சென்சஸ் டவுன்), பள்ளிக்கரணை (பேரூராட்சி), மடிப்பாக்கம் (செசன்ஸ் டவுன்), ஜல்லடியன்பேட்டை (செசன்ஸ் டவுன்) மற்றும் சோழிங்கநல்லூர் (பேரூராட்சி).
இந்தப் பகுதியில் நம்முடைய நண்பர்கள் எவரேனும் வசித்தால், அவர்களை நாடி நம்ம சரத்பாபுவுக்கு வாக்கு சேகரிப்போம்…
நான் தயார்… இதோ சைதாப்பேட்டையில் வசிக்கும் என் நண்பனுக்கு ஃபோன் செய்ய மொபைலை எடுத்துவிட்டேன். நீங்கள்?
(குளோபனின் உறுதிமொழி: சரத்பாபுவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன், எனது வலைப்பதிவை எவரேனும் திறந்தால் ‘சரத்பாபு’ பற்றிய இந்தப் பதிவுதான் முதலில் தெரிய வேண்டும் என்ற காரணத்தாலும், தமிழகத்தில் தேர்தல் முடியும் வரை குளோபனின் களத்தில் பதிவு இடப்போவது இல்லை என்று உறுதிகூறுகிறேன்.)
நன்றி :குளோபன்தங்களால் முன்ற வரை எந்த பதிவினி பரப்புக மக்களே
சரத்பாபுவின் தளம்
http://www.orkut.co.in/Main#Profile.aspx?rl=mp&uid=6812256232724535861
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக